விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வோருக்காகச் சிறப்புப் பேருந்துகளைத் தமிழக அரசு இயக்கவுள்ளது.
விழாக்காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் வெளியூர் பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
வரும் சனி (செப்டம்பர் 16), ஞாயிறு (செப்டம்பர் 17), திங்கள் விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 18) என மூன்று நாட்கள் விடுமுறை தினங்கள் வருகிறது. இதனை முன்னிட்டு நாளை மாலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 15) சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், சனிக்கிழமை (செப்டம்பர் 16) 200 பேருந்துகளும் இயக்கப்படும்.
கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோன்று விடுமுறை முடிந்து திங்கள் மாலை பயணிகளின் வசதிக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் வாயிலாகப் பயணிகள் பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து நாளை பயணம் மேற்கொள்ள 19,268 பயணிகளும், 16ஆம் தேதி 11,471 பயணிகளும் மற்றும் 17ஆம் தேதி 7,773 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
நாடெங்கும் கள்ள துப்பாக்கி : என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?