நாங்கள் புதிய கல்விக் கொள்கையை நிச்சயம் ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டதாக கனிமொழி பேட்டி அளித்துள்ளார். definitely not accept the new education policy
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 10) தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவைக்கு வந்த சபாநாயகர் ஓம்பிர்லா, அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக தமிழக எம்.பி.க்களுக்கும், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. ‘பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை’ என்று கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “அவர்கள் (திமுக எம்.பி.க்கள்) நாகரிகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள், தமிழக மாணவர்கள் மீது அக்கறை இல்லாதவர்கள். அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். அவர்கள் தமிழக மக்களுக்கு நேர்மையானவர்களாக இல்லை,” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் ஆவேசமடைந்த தமிழக எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி, “கேள்வி நேரத்தின் போது எங்கள் உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டின் தீவிர பிரச்சினை குறித்து பேசினார், ஏனெனில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான நிதியை கொடுக்கவில்லை., புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையில் கையெழுத்திட தமிழக அரசு ஒப்புக் கொள்ளாவிட்டால், ரூ.2000 கோடிக்கு மேல் மதிப்புள்ள நிதி எங்கள் குழந்தைகளுக்கு விடுவிக்கப்படாது என்று கூறுகின்றனர்.
மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. இதை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது.
தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டோம். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று பிரதமர் மோடி, கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும் என்று முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்” என்று கூறினார்.
மேலும், “தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் கூறியது மனதை புண்படுத்துகிறது” என்றும் கனிமொழி தெரிவித்தார்.
முன்னதாக, “கடந்த மார்ச் மாதம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட தமிழக முதல்வர் ஒப்புக்கொண்டார் என்றும் ஆனால் சூப்பர் முதல்வர் ஆலோசனைக்கு பிறகு இந்த திட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் தமிழக அரசு யுடர்ன் அடித்துவிட்டது” என்றும் தர்மேந்திர பிரதான் கூறியிருந்த நிலையில், கனிமொழி இவ்வாறு கூறியுள்ளார். definitely not accept the new education policy