தமிழக கோயில்கள் என்ன சத்திரமா? – தனிநபர் யாகம் நடத்த உயர் நீதிமன்றம் தடை!

Published On:

| By Kalai

தமிழகத்தில் உள்ள  கோயில்களில் உள் பிரகாரத்தில் தனி நபர் யாகம் , சிறப்பு யாகங்கள்  செய்ய  தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி பாஜக மாவட்ட செயலாளர் சித்ரங்கநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அதில், ” திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 2022 அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும். அக்டோபர் 30ஆம் தேதி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.

ADVERTISEMENT

காலம் காலமாக நடைபெறும் வழிமுறைகளை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது நீதிபதிகள், திருச்செந்தூர் முருகன் கோயில் முழுவதுமாக தனியார் கையில் உள்ளது. திருப்பதி கோயில்களில் இதே போன்று உள்ளே சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் மட்டும் சத்திரமா? இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியும். கோயில் பணக்காரர்களுக்கானது கிடையாது. கடவுள் அனைவருக்கும் சமமானவர்.  

தமிழகத்தில் உள்ள கோயில்களை காப்பாற்ற புதிய வழிமுறைகள் கொண்டு வர வேண்டும். திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் உட்பட,

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதியில் உள்ளது போன்ற கட்டுபாட்டு நடைமுறைகளை கொண்டு வர வேண்டும்.

தமிழகத்திலுள்ள கோயிலின் வளாகத்திற்குள் யாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும்.

இதனை இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

திருச்செந்தூர்  கந்தசஷ்டி விழாவில் கோவில் உள் பிரகாரத்தில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்ற அரசின் நிலைப்பாடு மிக சரியானது என்று கூறினர்.

மேலும்  திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறைகள்,  கட்டுப்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கலை.ரா

“என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டியது அண்ணாமலையை தான்” – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு!

கேசிஆர் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக குதிரை பேரம்: சிக்கிய கோடிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share