தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலக் குறைவால் விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28) காலமானார். தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல் இன்று (டிசம்பர் 29) பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத் திடலில் வைக்கப்பட்டது.
இன்று காலை முதல் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகைகள் குஷ்பு, நளினி, சுகன்யா உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தீவுத் திடலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா