குடிசையில்லா வீடுகள்… தமிழக அரசின் டார்கெட்!

Published On:

| By vanangamudi

2025 – 26-ஆம் ஆண்டுக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. Tamil Nadu Government target house

தமிழகத்தில் 2023 – 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளது. அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 80 சதவிகித குடிசை வீடுகள் உள்ளது. அடுத்தபடியாக, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் அதிகளவில் குடிசைகள் உள்ளது.

2035-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசை வீடுகள் இல்லாத வகையில், அனைத்து வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வகையில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, ஊரக உள்ளாட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பொன்னையா ஆகியோர் சேர்ந்து அனைத்து மாவட்ட துணை ஆட்சியர், திட்ட அதிகாரிகள் கூட்டத்தை சமீபத்தில் நடத்தினார்கள்.

அந்த கூட்டத்தின்போது, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குடிசை வீடுகளின் புள்ளி விவரங்கள் கேட்கப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2025 -26-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க ஏப்ரல் முதல் வாரத்தில் கணக்கெடுப்புகளை துவங்கி பயனாளிகளுக்கு அலர்ட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஒரு வீடு கட்ட 3.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வீடு கட்ட தேவைப்படும் கம்பி, சிமெண்ட், கதவு ஆகியவை மானிய விலையில் அரசு சார்பில் கொடுக்கப்படுகிறது என்பதை பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Tamil Nadu Government target house

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share