தமிழ்நாடு அரசு 4 ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளது. Tamil Nadu government appointed 4 IAS officers
தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாளை முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய விண்ணப்பங்களை பெறுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14) வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், கீழ்க்கண்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார்.
1. ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம்.
2. ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
3. தீரஜ் குமார், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4.பெ. அமுதா, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், எரிசக்தித் துறை · மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை · போக்குவரத்துத் துறை · கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை · வெளிநாடு வாழ் தமிழர் நலன் · பள்ளிக் கல்வித் துறை · உயர்கல்வித் துறை · கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை · மனிதவள மேலாண்மைத் துறை
ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை · ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை · கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை · வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை · நீர்வளத் துறை · சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை · குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை · தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை · இயற்கை வளங்கள் துறை
தீரஜ் குமார். ஐஏஎஸ், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
பெ. அமுதா, ஐஏஎஸ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை · மாற்றுத் திறனாளிகள் நலத்துறை · தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை · ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை · பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை · வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை · நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை · சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.
அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசிய அமுதா ஐஏஎஸ், “கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு கோடியே 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு ஒரு கோடியே ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசின் திட்டம் விரைவாக மக்களுக்கு சென்றடைய வேண்டும். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களது குறைகளை தீர்த்து வைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு பெற்ற 45 நாட்களுக்குள் அவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதில் திருப்தி இல்லை என்றால் மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்” என்று கூறினார். Tamil Nadu government appointed 4 IAS officers
