தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருன்றன. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வைத் தொடங்கும் என்று கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம்.
கலந்தாய்வு, பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி… கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்துக்குள்ளாக வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும்” அவர் கூறியுள்ளார்.
-ராஜ்
