தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையில் நேற்று (பிப்ரவரி 10) இரவு 11.30 மணியளவில் புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரகடத்தில் உள்ள தனியார் இருசக்கர தொழிற்சாலையிலிருந்து புதிய ரக புல்லட் வாகனங்களை ஏற்றிக்கொண்டு சென்னை விருகம்பாக்கத்தை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையில் போரூர் அருகே லாரி வந்துகொண்டிருந்தபோது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. இதனால் தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையில் மூன்று கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்த போரூர் போக்குவரத்து போலீசார் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் முகமது ஆசிக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
செல்வம்