பணியிடத்தில் தாம்பரம் மாநகர ஆயுதப்படை காவலர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும் அதற்கான காரணத்தையும் சொல்லியுள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகம், சோழிங்க நல்லூரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமாக பதுவஞ்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆயுதப்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 1,800 காவலர்கள் உள்ளனர். இதில், 800 பேர் தாம்பரம் ஆணையரகத்தின் கீழ் உள்ள 23 காவல் நிலையங்களில் பணி செய்கின்றனர். மேலும், 400 பேர் பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படையில் பணி செய்கின்றனர்.
இவர்கள் முக்கிய பாதுகாப்புக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவார்கள். தற்போது உள்ள அலுவலகத்தில் கீழ் தளம், முதல் தளம் என இரண்டு தளங்கள் உள்ளன.
இந்த இரண்டு தளங்களையும் உயர் அலுவலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், காவலர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள காவலர்கள் தரப்பினர், “காவலர்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. மேலும், ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தலா ஐந்து கழிவறைகள் மட்டுமே உள்ளன. 100 பேர் எப்போதும் அலுவலகத்தில் இருப்பார்கள். ஆனால், மிகவும் குறைவாக உள்ள கழிவறை வசதிகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஓய்வெடுக்க அறை இல்லை. கழிவுநீர் தொட்டி நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது. அதன் மீது காவலர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. போதிய குடிநீர் வசதியும் இல்லை.
இந்த பிரச்சினை குறித்து காவல் ஆணையர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல அலுவலக வாகனங்கள் பழுதடைந்து உள்ளன. இயங்குவதுபோல் போலி கணக்கு மட்டும் காட்டப்படுகிறது.
துப்பாக்கி, கை விலங்கு போன்றவற்றை சரியாக இயக்க முடிவதில்லை. இதுபற்றி புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.
மேலும், சிறையில் இருக்கும் குற்றவாளிகளை அழைத்து செல்ல, ஒரு குற்றவாளிக்கு, மூன்று காவலர்களை அனுப்ப வேண்டும். ஆனால், குறைவாக அனுப்புகின்றனர். இதனால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற பல பிரச்சினைகளால் இங்கு பணிபுரியும் காவலர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம்.
கருவுற்றிருக்கும் பெண் போலீஸார், பரேடு செய்யவும், காவல் பணிக்கும் அனுப்பப்படுகின்றனர். இதனால் இதுவரை சுமார் ஐந்து கருச்சிதைவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், காவலர்கள் திருமணம், மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு தற்செயல் விடுப்பை சரியாக கொடுப்பதில்லை” என்று காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அநாகரிக பேச்சு, மெமோ, பதவி உயர்வு, சம்பளம் போன்ற காரணங்களை காட்டி அச்சுறுத்தப்படுவதாகவும் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாகவும் காவலர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஸ்பைஸி இறால் புரொக்கோலி இட்லி உப்புமா
ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு
ராமதாஸை இன்சல்ட் செய்த ஸ்டாலின்… ’வேலை’யைக் காட்ட பாமக திட்டம்!