தமிழக அமைச்சர்கள் குழுவுடனான அரசு ஊழியர்கள் -ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பாகிய ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து ஜனவரி 6-ந் தேதி முதல் திட்டமிட்டபடி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை அரசு ஊழியர்கள்- ஆசிரியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. இதனால் தமிழ்நாடு அரசு, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்தது.
தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று டிசம்பர் 22-ந் தேதி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 6-ந் தேதி முதல் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
