ADVERTISEMENT

5,000 கடைகளைத் திறக்கும் க்ஷியோமி!

Published On:

| By Balaji

அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிராமப்புற இந்தியாவில் 5,000 விற்பனை மையங்களைத் திறக்க க்ஷியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பிரபல மின்சாதன உற்பத்தி நிறுவனமான க்ஷியோமி, சென்ற 2014ஆம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. துவக்கத்தில் ஆன்லைன் வாயிலாகவே தனது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது. அதன் பின்னர் 2017ஆம் ஆண்டில்தான் நேரடி விற்பனையைத் தொடங்கியது. Mi என்ற பிராண்டு பெயரில் இந்தியாவில் க்ஷியோமி ஸ்மார்ட்போன்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 500 விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநருமான மனு ஜெயின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “இங்கு நேரடி விற்பனையைத் தொடங்கி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இதற்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்னர் நேரடி விற்பனையை மேம்படுத்த நாங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கிராமப்புற இந்தியாவில் அதிகக் கவனம் செலுத்தினோம். எங்களது பெரும்பாலான விற்பனை மையங்கள் கிராமப்புறங்களைச் சார்ந்ததாகவே இருக்கும். 5,000 புதிய விற்பனை மையங்களை அமைப்பதன் மூலமாக இங்கு 15,000 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share