டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
அந்த வகையில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று (நவம்பர் 9) சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில், குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தானும் மோதின.
இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 எடுத்தது.
நியூசிலாந்து அணியில் மிட்சல் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் வில்லியம்சன் 46 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்களையும் முகம்மது நவாஷ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
அவ்வணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாமும், முகம்மது ரிஸ்வானும் நங்கூரம் போல் நிலைத்து நின்று வெற்றிக்கான பயணத்தைத் தொடருவதற்கு வழிவகுத்து கொடுத்தனர்.
ரிஸ்வான் 43 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுக்க, அவருக்கு துணையாக கேப்டன் அசாம் 42 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார்.
அவர்களின் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய முகம்மது ஹாரிஸ் பொறுப்புணர்ந்து அணியின் வெற்றிக்காக உழைத்தார்.
அவர் அதிரடியாய் ஆடி, 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஷான் மசூத்தும் இப்திகார் அகமதுவும் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி, 10.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அது, நாளை (நவம்பர் 10) வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இதற்குமுன் இரண்டு முறை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. அதில், 2007ஆம் ஆண்டு முதல்முறையாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.
ஆனால், இரண்டாவது முறை 2009ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆனது.
தற்போது 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
மேலும், இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாக இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!
2023 ஐபிஎல்: கேரளாவில் மினி ஏலம்!