தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்த பிரபலங்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர்.
1980ல் அவர் இயக்கி நடித்து இசையமைத்த ’ஒரு தலை ராகம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது.
அதன்பின்னர் நெஞ்சில் ஒரு ராகம், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
தற்போது 70 வயதான டி. ராஜேந்தர் சிறப்பு தோற்றத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூலி படத்தில் இவரது குரல் இடம்பெற்ற ’சிக்கிட்டு’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களை சந்தித்து திரையுலகில் தனது புதிய முயற்சி குறித்து பேட்டி அளித்தார்.
அவர், “நான் ‘டி.ஆர். டாக்கீஸ்’ என்ற ஓடிடி நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். அதில் 1983ஆம் ஆண்டு நான் இயக்கி நடித்த ’உயிருள்ளவரை உஷா’ படத்தை 4k தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டள்ளேன். இப்படம் வணிக ரீதியாக படம் தற்போது வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக விஜய்யின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளார்கள் கேட்டபோது, “அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பின்பு, ’அநாவசியமாக எதுக்கும் போகக்கூடாது வம்பு. எல்லோரிடமும் காட்ட வேண்டும் அன்பு. எனக்குள்ளே வந்துவிட வேண்டும் அந்த பண்பு” என அவர் தனது பாணியிலேயே அடுக்குமொழியில் பதிலளித்தார்.
அடுத்த சில நொடிகளில் கண்கலங்கி பேசிய அவர், “விஜய் என்னுடைய நண்பர். திரையுலகில் மறைந்துவிட்ட விஜயகாந்த் எனது மிகப்பெரிய நண்பர். அவரது சட்டம் சிரிக்கிறது, கூலிக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவன் நான்.
ஆனால் அரசியல் தளத்தில் சில பத்திரிகைகள் செய்த கூத்தால் எங்கள் இருவரின் நட்பு உடைந்தது. அதன்பின்னர் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவர் என் மகன் சிலம்பரசன். அப்போது என் மகன் என்னிடம் சொன்ன ஒரு காரணத்திற்காக நான் ஒரு முடிவு செய்தேன்.
எக்காரணம் கொண்டும் இந்த அரசியலுக்காக எனது திரையுலக நட்பை இழக்க கூடாது என்பதே அந்த முடிவு. அது சூப்பர்ஸ்டார் ரஜினியாகவோ, சூப்பர் ஆக்டர் கமலாகவோ, நம்முடைய இளைய தளபதி விஜயாகவோ இருக்கலாம். என்னுடைய அரசியலுக்காக நான் யாரையும் இழக்க விரும்பவில்லை” என்று டி.ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்தார்.
