அறம் படத்திற்குப் பிறகு கோபி நயினார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்திகளை படக்குழு மறுத்துள்ளது.
அறம் படம் தந்த வரவேற்பினால் தனது அடுத்த படத்தை உருவாக்கும் முனைப்பில் பிஸியாகி விட்டார் இயக்குநர் கோபி நயினார். இந்த முறை நயன்தாராவுக்கு பதிலாக அமலா பாலை கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வட சென்னைப் பின்னணியில் உருவாகவிருக்கும் இதில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், இதில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருப்பதாகவும் படத்திற்கு கறுப்பர் நகரம் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது சம்பந்தமாக படக்குழுவினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, “இது போன்று பல செய்தி நிறுவனங்கள் இணையத்தில் வெளியிட்டுவருகின்றன. இது முற்றிலும் நம்பகத்தன்மையில்லாத தகவல். ஜி.வி. பிரகாஷ் நடிக்கவிருப்பதாகவும், படத்திற்கு கறுப்பர் நகரம் எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுவரும் செய்திகள் வதந்தியே” என்று மறுத்துள்ளனர்.
தற்போது படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.�,