அண்ணாவின் பெயரால் மறுமலர்ச்சி!

Published On:

| By Balaji

அனைத்து கிராமங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படுத்த, அறிஞர் அண்ணாவின் பெயரில் ஒரு திட்டத்தைக் கொண்டுவர முனைந்தார் கலைஞர் கருணாநிதி. 2006ஆம் ஆண்டில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதனைச் செயல்படுத்தியது; அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உருப்பெற்றது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் போதுமான நிதி ஆதாரங்களை ஒருமுகப்படுத்தி, உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தும் வகையில் திருப்புமுனைத் திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

தனிநபர் வருமானம் குறைவாக உள்ள மற்றும் குறைந்த வருவாய் கொண்ட கிராம ஊராட்சிகளுக்கு இதில் முக்கியத்துவம் தரத் திட்டமிடப்பட்டது.

ADVERTISEMENT

இதனைச் செயல்படுத்தும் பொறுப்பு கிராம ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர் அல்லது ஒன்றியப் பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலைகளைத் தேர்வு செய்வதில் கிராம ஊராட்சித் தலைவரின் முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று முடிவானது.

இதன்படி, ஒரு ஊராட்சியில் அல்லது கிராமப் பகுதியில் குளம், ஊருணி, குட்டை என்று அங்குள்ள நிலத்தின் தன்மைக்கு ஏற்பப் புதிதாக நிர்மாணிப்பது அல்லது ஏற்கனவே இருப்பவற்றை புனரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. பள்ளி மற்றும் சமுதாய விளையாட்டு மையங்கள், நூலகங்கள், சுடுகாடு அல்லது இடுகாடு, குடிநீர் விநியோகம் ஆகிய பணிகள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல, வேறு திட்டங்களுக்கு உதவும் நோக்கில் அறிஞர் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதியினைச் செலவு செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கிராமப்புற மக்கள் தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களை அரசு நிதியுதவியுடன் தாங்களே செயல்படுத்திக்கொள்ள ‘நமக்கு நாமே’ திட்டம் 1998-99ஆம் ஆண்டில், கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையினால் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. அதுபோலவே, கிராமப்புற மேம்பாட்டை அடிநாதமாகக் கொண்ட அனைத்து கிராம அறிஞர் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலமாக, கிராமப்புற மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் நிலை உருவானது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதியைச் சீர் செய்ய இது உதவியது. அதோடு, இறப்பு சார்ந்த சமூக மோதல்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போதும், இந்த திட்டம் உயிர்ப்புடன் உள்ளது என்பதே இதன் சீரான இயக்கத்திற்குச் சான்று.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share