தமிழ் சினிமாவில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நடிகர்களுக்கு பட்டம் கொடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து ரஜினி – விஜய் ரசிகர்களிடையே சமூகவலைதளங்களில் சமீபகாலமாக சண்டைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் வாரிசு இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார், தில்ராஜு போன்றவர்கள் சூப்பர்ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு கொடுத்து மேடையில் பேசினர்.
சரத்குமார் பேசுகையில், ”நான் நடித்த சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினேன். அது இப்போது நடந்துள்ளது” என்று தெரிவித்தார். அவரது பேச்சால் கொதிப்படைந்த ரஜினி ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
இதனால் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சரத்குமார், “விஜய்யின் வளர்ச்சியை பார்த்து அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நான் சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவில் கூறியிருந்தேன். அதைத்தான் வாரிசு படத்தின் இசை விழாவிலும் சொன்னேன். ரஜினிகாந்த் தற்போதைய சூப்பர் ஸ்டார் இல்லை என்றோ விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்றோ நான் சொல்லவில்லை.” என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் வாரிசு திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியாகி தற்போது உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலுடன் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இதனை முன்னிட்டு சென்னையில் வாரிசு படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அப்போது நடிகர் சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் விஜய் என்று பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் படு டென்ஷன் ஆன சரத்குமார், ”ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார் வருவார். சூப்பர் ஸ்டாரை விட பெரிய பட்டம் சுப்ரீம் ஸ்டார் பட்டம். நான் ஒருநாள் பேசியதை பெரிதுபடுத்தி மிகப்பெரிய விஷயம் மாதிரி பண்ணாதீங்க. நான் சொன்னதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
மேடையில் சொன்னது என்னுடைய பையனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார். எனக்கு எனது அப்பா சூப்பர் ஸ்டார். என்ற அர்த்தத்தில் தான்.
சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம். நான் அடுத்த முதலமைச்சர், அடுத்த பிரதமர் என்று சொல்லவில்லை. பட்டத்தை தான் பார்க்கிறீர்களா? மனிதனை பார்க்கவில்லையா? நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் கேம். நீங்க பிரிவினை பார்க்கிறீர்கள். 24ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கிறேன். அப்போது இதுகுறித்து விரிவாக பேசுவோம்.” என்று தெரிவித்தார்.
அப்படியென்றால் சூப்பர் ஸ்டார் பிரச்சனை இன்னும் ஓயவில்லை… அப்படிதானே?
கிறிஸ்டோபர் ஜெமா
பாலமேடு ஜல்லிக்கட்டு : 23 காளைகளை அடக்கி காரை வென்றார் தமிழரசன்
பாலமேடு ஜல்லிக்கட்டு : 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு!
Comments are closed.