நீட் தேர்வை இரண்டு ஷிப்ட்டுகளில் நடத்தாமல் ஒரே ஷிப்ட்டில் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. supreme cpurt order to conduct neet pg 2025
2024-ல் முதல் முறையாக நீட் முதுகலைத் தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்பட்டது. 2025-ம் ஆண்டு நீட் பிஜி தேர்வு ஜூன் 15 அன்று இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து மருத்துவர் அதிதி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (மே 30) நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார், மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ஏன் இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.
தேசிய தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் ஆச்சார்யா, “தேர்வை நடத்துவதற்கு போதுமான வைஃபை, கணினி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தேர்வு மையங்கள் குறைவு என்பதால் இரண்டு ஷிப்ட்டுகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
2.5 லட்சம் விண்ணப்பதாரர்களில் ஒரு சிலரே நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வரும் ஜூன் 15 தேர்வு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் நீதிமன்ற தலையீடு ஏதேனும் இருந்தால் தேர்வை ரத்து செய்ய நேரிடும். அதனால் மாணவர் சேர்க்கையும் தாமதமாகும்” என்று வாதிட்டார்.
மனுதாரர்கள் சார்பில், “இரண்டு ஷிப்டுகளில் தேர்வை நடத்துவது அரசியலமைப்பின் பிரிவு 14 இன் கீழ் தேர்வர்களின் உரிமையை மீறுவதாகும். இதில் வெளிப்படைத் தன்மை இருக்காது, நியாயமாக தேர்வை நடத்த முடியாது. 2024ல் நீட் பிஜி தேர்வும் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஷிப்டுக்குமான கேள்விகள் வெவ்வேறாக இருக்கும். இது ஏற்றத்தாழ்வுகளை காட்டுகிறது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “நாடு முழுவதும் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை. ஒரே ஷிப்ட்டில் தேர்வை நடத்த தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற வாதங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
2 ஷிப்ட்டுகளில், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்தப்படுவது பாரபட்சத்தை ஏற்படுத்தும். எனவே இரண்டு ஷிப்ட் முறையை ரத்து செய்கிறோம். வரும் நீட் பிஜி தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். supreme cpurt order to conduct neet pg 2025
