வக்ஃபு சட்டத்தின் 4 திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை: ஸ்டாலின், விஜய் வரவேற்பு!

Published On:

| By Mathi

Waqf Act Supreme Court

வக்ஃபு சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 4 திருத்தங்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை
2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை
3) ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)
4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தவெக தலைவர் நடிகர் விஜய்: வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று, முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பின் வாயிலாக நமது இஸ்லாமியச் சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம்.

அரசியலமைப்பின் மாண்பைக் காக்கும் வகையிலும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீதி, சமத்துவம் மற்றும் மதச் சுதந்திரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் விதிகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. இது, இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்களின் குரலாக ஒலித்த தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கும் இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

இந்த வெற்றியை அடைவதற்காகத் தங்களின் அளப்பரிய பங்களிப்பை அளித்த நம் சட்ட வல்லுனர் குழுவிற்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நடிகர் விஜய் கருத்து:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share