சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பிகார் அரசு வெளியிடுவதை தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 6) தெரிவித்துள்ளது.
பிகார் மாநிலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகளை கடந்த 2ஆம் தேதி அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் வெளிட்டார்.
அதில் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13.07 கோடி எனவும், அவர்களில் 63 சதவிகிதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs) என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை வெளியிட அனுமதி அளித்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்ரஜிதா சிங்,
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்றும், கணக்கெடுப்புக்கான விவரங்களை சேகரிப்பதில் முறையான நோக்கம் இல்லை என்றும் வாதிட்டார்.
மேலும் இந்த விவகாரத்தில் தனியுரிமை மீறப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவும் தவறானது. எனவே தரவுகளை வெளியிடுவதை நிறுத்த உத்தரவிடுமாறும் அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்த நீதிமன்ற அமர்வு,
”எந்தவொரு தனிநபரின் பெயர் மற்றும் பிற அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்பதால், தனியுரிமை மீறப்பட்டது என்ற வாதம் சரியானதாக இருக்காது.
பிகார் அரசு சில தரவுகளை வெளியிடுவதன் மூலம் தடை உத்தரவை முன்னெடுத்துச் சென்றதாக மனுதாரர்களின் ஆட்சேபனைகளையும் நிரகாரிக்கிறோம்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுவதில் இருந்து பிகார் அரசை தடுக்க முடியாது. மாநில அரசின் கொள்கை வகுக்கும் முடிவில் தலையிட முடியாது. அது தவறாகும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பீகார் அரசிடம் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்டாவை காப்பாற்றுங்கள், பிறகு இந்தியாவை காப்பாற்றலாம்: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார்