தென்பெண்ணையாறு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா – தமிழ்நாடு இடையே பாயும் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் முயற்சியில் இறங்கி வருகிறது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடைவிதிக்கக்கோரியும், தென்பெண்ணையாற்று நீர் பங்கீடு வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கில் கடந்த 2019 ம் ஆண்டு நீதிபதி யு.யு.லலித் அமர்வு நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு இதுவரை நடுவர் மன்றம் அமைக்கவில்லை.
இந்தநிலையில் இன்று (நவம்பர் 16) இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக சமரசக் குழு கூடி விவாதிக்கப்பட்டு வருகிறது, நதிநீர் பங்கீட்டு வாரியம் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால் நீதிபதிகள், ஏன் இதுவரை தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நதிநீர் விஷயங்களை அரசியல் ஆக்காதீர்கள்.
இன்னும் எத்தனை நாளுக்கு தான் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்கள் நிலுவையிலே இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்.
வழக்கு விசாரணைக்கு வரும் போது மட்டும் விழித்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு முறை கால அவகாசம் கேட்கிறீர்கள்.
இப்படியே செய்தீர்கள் என்றால் 10ஆண்டுகள் ஆனாலும் தீர்வு கிடைக்காது என மத்திய அரசுக்கு சரமாரிக் கேள்விகள் எழுப்பினர்.
மேலும் இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட வேண்டுமா, வேண்டாமா என்று கர்நாடக அரசுக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க 4 வாரம் கால அவகாசம் கோரியது. இதையடுத்து வழக்கு டிசம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கலை.ரா