நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கும் நோக்கில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
“உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள், 2026” என்ற பெயரில் ஜனவரி 13-ந் தேதி
வெளியிடப்பட்ட இந்த யூஜிசி விதிமுறைகள், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், ஜனவரி 29 அன்று உச்ச நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விதிமுறைகளை வரவேற்றுப் பாராட்டியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
யூஜிசி-யின் புதிய விதிமுறைகள் என்ன?
இந்த புதிய விதிமுறைகளின் முக்கிய நோக்கம், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே பாகுபாட்டைத் தடுத்து, அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் சிகிச்சையை உறுதி செய்வதாகும். இதன் கீழ், ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமும் வளாகத்தில் ஒரு “சம வாய்ப்பு மையம் (Equal Opportunity Centre – EOC)” அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
மேலும், பாகுபாடு தொடர்பான புகார்களைக் கையாளுவதற்கும், குறிப்பாக பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மாணவர்களிடமிருந்து வரும் புகார்களைக் கையாளுவதற்கும் சிறப்பு குழுக்கள், ஹெல்ப்லைன்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்களை அமைக்குமாறும் யூஜிசி நிறுவனங்களைக் கேட்டிருந்தது.
உயர்ஜாதியினர் எதிர்ப்பு
யூஜிசி-யின் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே பரவலான எதிர்ப்புகளைச் சந்தித்தன. குறிப்பாக, பொதுப் பிரிவைச் சேர்ந்த- முற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெறுகிற உயர்ஜாதி மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் இந்த விதிகள் தெளிவற்றவை என்றும், தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், புகார் தீர்வு வழிமுறையிலிருந்து பொதுப் பிரிவு மாணவர்களை விலக்குவதாகவும் குற்றம் சாட்டின.
உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
ஜனவரி 29, 2026 அன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, “இந்த வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் திறன் கொண்டவை” என்றும், “கடுமையான தாக்கத்தை” ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டது.
மேலும், விதிமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி தெளிவற்றதாக இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2012 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்கள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
ஸ்டாலின் அறிக்கை
முன்னதாக யூஜிசியின் விதிமுறைகளை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கை: UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும்.
ஒன்றிய அளவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் – காஷ்மீர் – சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்களும் தொல்லைக்குள்ளாக்குவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சமத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை தவிர்க்க முடியாத கட்டாயமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
யுஜிசி புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக்கத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது. மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, ஒன்றிய அரசு இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.
ரோகித் வெமுலா அவர்களின் தற்கொலை போன்ற வழக்குகளில், துணைவேந்தர்கள் மீதே குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், யுஜிசி புதிய விதிகளின்படி உயர்கல்வி நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தலைமையிலேயே சமத்துவக் குழுக்களை அமைத்தால் அவை எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பல உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது இக்கேள்வி மேலும் வலுவடைகிறது.
மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பது, பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பது ஆகியவற்றில் ஒன்றிய பா.ஜ.க. அரசு உண்மையாகவே தீவிரமாக இருந்தால், இந்த விதிகளை மேலும் வலுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதில் உள்ள அமைப்புரீதியான குறைகளைக் களையும் வகையில் திருத்தியமைக்க வேண்டும். முறையாக நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியிருந்தார்.
