கைதிகள் விடுதலை விவகாரத்தில் எப்போது முடிவெடுப்பீர்கள் என்று தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) கேள்வி எழுப்பியுள்ளது.
குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கோவை சிக்கந்தர், ரியாசுதீன் உட்பட 3 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதன் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்நிலையில் சிக்கந்தர் உள்ளிட்ட 3 சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில், 3 பேர் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், “25 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசு அனுப்பிய கோப்பு ஏன் நிலுவையில் உள்ளது? அதன் மீது எப்போது முடிவெடுப்பீர்கள்? அரசு அனுப்பிய கோப்புகளின் நிலை என்ன?” என கேள்விகளை எழுப்பியது.
3 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மத்திய பிரதேசத்தின் முதல்வரான அமைச்சர்!
IPL2024: தோனி தொடங்கி கில் வரை… கேப்டன்களின் சம்பளம் இதுதான்!