டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ஆம் தேதி திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார். இந்தநிலையில், அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஜூலை 12 -ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், ஜூன் 26-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார்.
இந்தநிலையில் சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், “இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது. சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் வழங்குகிறோம்” என்று தெரிவித்தனர்.
அப்போது கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், அடுத்த வாரம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நான் ரெடி தான் வரவா”… மாநாட்டுக்கு தேதி குறித்த விஜய்?
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!