தேனி தொகுதி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இன்று(ஆகஸ்டு 4) இடைக்கால தடை விதித்துள்ளது. இதன் மூலம் இன்றோடு காலாவதியாக இருந்த ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி.பதவி தப்பிப் பிழைத்திருக்கிறது.
2019மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு தனக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 30நாட்கள் அவகாசம் வழங்கி தீர்ப்பை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.
தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டுக்காக உயர்நீதிமன்றம் கொடுத்த அவகாசம் ஆகஸ்ட் 4 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓ.பி.ரவீந்திரநாத்தின் வழக்கறிஞர் கேட்டன் பால் உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் அவசரமாக ஒரு கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
அதில், “உயர் நீதிமன்றம் அளித்த நிறுத்தி வைப்பு காலாவதியாகும் முன்பே உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு வழக்கைப் பட்டியலிடவேண்டும். ஓ.பி.ரவீந்திரநாத் தற்போது எம்பி.யாக இருக்கிறார். அவரது மேல் முறையீடு 4ஆம் தேதிக்குள் பட்டியலிடப்படவில்லை என்றால் அவர் பதவி இழக்க நேரிடும்.
மேற்கூறிய உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க ஏதுவாக விரைவில் பட்டியலிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே விவகாரம் தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் அவசரமாக இவ்வழக்கைப் பட்டியலிட வேண்டும் என்று மென்ஷன் செய்தார்கள். ஆனால் இந்த மேல் முறையீட்டை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் மறுத்துவிட்டார். இது குறித்து, ”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரிப்பு: ஓ.பி.ஆர். எம்பி. பதவி இழப்பு!” என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் வழக்கறிஞர்கள் மீண்டும் மென்ஷன் செய்து , வழக்கை இன்று விசாரிக்காவிட்டால், அதுவே எம்பி பதவி இழப்புக்குக் காரணமாகிவிடும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில்… மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்… எதிர் மனுதாரர்கள் மிலானி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓ.பி.ரவீந்திரநாத் அக்டோபர் 4ஆம் தேதி வரை எம்.பி.யாக தொடர்கிறார்.
மோனிஷா
சானியா மிர்சா குறித்தான பயோவை நீக்கிய சோயிப் மாலிக்
“வருவார்…கேள்விகள் தொடரும்”: ராகுல் தீர்ப்புக்கு பின் காங்கிரஸ் கருத்து!