இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் 2020ல் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். எனவே இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இடம் பிடித்தார். இதனிடையே, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில், இதனை ஒப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் என்று குறை கூறியுள்ளார். தி ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் அவர் எழுதியுள்ளதாவது:
“ரவிச்சந்திர அஷ்வினை, அவரது பந்துவீச்சு திறமையைக் காரணம் காட்டி ஓரங்கட்டுவதற்கு நீண்டகாலமாகும். ஆனால் அணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில், அதில் கலந்துகொள்பவர்கள் தங்களுக்கு முரணான கருத்தை தெரிவித்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அஷ்வின் தனது மனதில் உள்ளவற்றை நேர்மையாகப் பேசக் கூடியவர்.
இந்த சூழலில், ஒரு ஆட்டத்தில் அஷ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், அடுத்த ஆட்டத்திற்கு அவரது நேர்மையால் அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவார். அதேசமயம் வளர்ந்த பேட்ஸ்மேன்களுக்கு அது நடப்பது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜன் பற்றிக் குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சில நாட்களிலேயே நடராஜன் முதன்முறையாகத் தந்தையானார். ஆனால் அவர் ஐபிஎல் முடித்த கையோடு ஆஸ்திரேலியா வந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் வலைப்பயிற்சியில் பந்துவீச இந்திய அணியுடன் நடராஜன் அழைத்துச் செல்லப்பட்டார்.

டி20 போட்டிகளில் இந்த யார்க்கர் நிபுணர் அபாரமாக ஆடினார். ஹர்திக் பாண்டியா தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதை இவரிடம் பகிர்ந்துகொண்டார். இந்த சூழலில் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட நடராஜன், தற்போது அணியின் உறுப்பினராகக் கூட அல்லாமல், வலைப்பயிற்சியில் பந்து வீச்சாளராக அமர்த்தப்பட்டுள்ளார். கற்பனை செய்து பாருங்கள், ஒரு மேட்சில் வின்னராக இருந்த அவர் தற்போது வலைப்பயிற்சியில் பந்து வீச்சாளராக இருக்கிறார். இந்நிலையில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடர் முடிந்த பிறகுதான் நடராஜன் தனது குழந்தையைப் பார்க்க முடியும்.
ஆனால் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, தனது மனைவிக்குக் குழந்தை பிறப்பதற்கு முன்பு, முதல் டெஸ்ட் முடிந்தவுடன் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா சென்றுவிட்டார். அதேசமயம் அறிமுக வீரரான நடராஜன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்.
இவ்வாறுதான் இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. வேண்டுமானால், இதை அஷ்வினிடமும், நடராஜனிடமும் கேட்டுப்பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் சுனில் கவாஸ்கர்.
**-பிரியா**,”
