அக்னி நட்சத்திரம்: 25 நாட்கள் நீடிக்கும் வெப்பம்

Published On:

| By admin

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்தது. வேலூரில் படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக 108.1 டிகிரி வரை கொளுத்தியது. தொடர்ந்து நேற்று 105.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையில் 105.2 டிகிரி வாட்டியது. கரூர், பரமத்தி, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருத்தணி, நாமக்கல், தஞ்சை ஆகிய நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் வெயில் பதிவானது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி இன்று தொடங்கியது. 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. கத்திரி கதகதப்பு தொடங்கியுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகள் முதியவர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. 25 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர் வற்றிப் போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நீர் சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.

அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தை குறைக்க சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தாராபிஷேகம் தொடங்கியது.

ADVERTISEMENT

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் அக்னி காலகட்டத்தில் பரவலாக மழை பெய்தால் ஓரளவு வெப்பம் தணியும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share