முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
2001-2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தனது மனைவி விஜயலட்சுமி மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை விடுவித்தது.
இந்நிலையில் கீழமை நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 27) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் வழக்கு தொடர்பான ஆவண நகல்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதும் சூமோட்டோ வழக்கு பதிவு செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா