பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் ஒரே நாளில் 3 முறை உலக சாதனையை முறியடித்து இந்தியாவுக்கு மற்றுமொரு தங்க பதக்கத்தை பெற்றுக் கொடுத்த சுமித் அண்டிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்று இந்தியாவிற்கு மிக சிறந்த நாளாக அமைந்துள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தினார். அதைத் தொடர்ந்து, ஆடவர் வட்டு எறிதலில் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் எஃப் 46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சந்தீப் சிங் குர்ஜர் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். இதனால் ஒரே நாளில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் தனது அபாரமான திறமையின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த சுமித் அண்டில்.
ஈட்டி எறிதலில் அவருக்கு மூன்றுவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. முதல் வாய்ப்பிலேயே 66.95 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார். இரண்டாவது வாய்ப்பில் 68.08 மீட்டர் தூரம் எறிந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டு 68.55 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார் சுமித் அண்டில்.
இந்தியாவுக்கு மற்றுமொரு தங்கத்தை பெற்று தந்த சுமித் அண்டிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், ” ‘டோக்கியோ 2020, பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பொன்னான நாள். ஒரே நிகழ்வில் மூன்று முறை சாதனை படைத்து, தங்க பதக்கம் வென்ற சுமித் அண்டிலை வாழ்த்துகிறேன். இது உண்மையிலேயே விதிவிலக்கானது” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில், “ பாரா ஒலிம்பிக் போட்டியில் நமது தடகள வீரர்கள் தொடர்ந்து பிரகாசித்து கொண்டிருக்கிறார்கள். பாரா ஒலிம்பிக்கில் சுமித் அண்டிலின் மகத்தான சாதனையால் நாடு பெருமை கொள்கிறது. மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றதற்கு சுமித்திற்கு வாழ்த்துக்கள். எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,