தமிழகத்தில் 14 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. தற்போது, இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.3,600 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் புதுப்பிக்கப்படாமல் பழமையானதாகவே உள்ளது. Sugarcane consultation was held
விவசாயிகளுக்கு மட்டும் ரூ.70 கோடி நிலுவைத்தொகை கொடுக்கப்படாமல் உள்ளது. சட்டமன்றத்தில் இதுதொடர்பான கேள்விக்கு, பதிலளிக்க நேற்று (ஏப்ரல் 25) இரவு தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், கூட்டுறவுத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு ஆகியோர் தீவிரமாக டிஸ்கஷன் செய்துள்ளனர்.

இந்த ஆலோசனையின் முடிவில், முதற்கட்டமாக 25 முதல் 40 சதவிகிதம் வரை கரும்பு நிலுவைத்தொகையை விசாயிகளுக்கு கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சனை தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயிகள், “கரும்பு விவசாயம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம், வெட்டுக்கூலி தான். 1 டன்னுக்கு 1,300 ரூபாய் வெட்டுக்கூலி செலவாகிறது. ஒரு ஏக்கரில் 35 டன் முதல் 40 டன் கரும்பு விளையும். அதன்படி பார்த்தால், ஒரு ஏக்கருக்கு 52,000 ரூபாய் வெட்டுக்கூலி செலவாகிறது.
கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு 3,151 ரூபாயாக அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு 1,26,000 ரூபாய் கிடைக்கிறது. வெட்டுக்கூலி போக, 74,000 விவசாயிகள் கைக்கு வருகிறது. அதில் மூன்றரை டன் விதைக்கரும்பு 10,500, ஏர் உழுவது 5000, நடவு செலவு 5000, உரமிடுதல் 11,000, சோலைக்கழித்தல் 6,000 உள்பட பராமரிப்பு செலவு 40,000 ரூபாய் ஆகிறது. அதன்படி பார்த்தால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 34 ஆயிரம் தான் மிஞ்சும்.

இது விவசாயிகளின் ஒரு வருட உழைப்பு. அதனால் இதில் எந்தவித பலனும் இல்லை என்று கரும்பிலிருந்து மாற்றுப்பயிர் விதைக்கிறார்கள். அதனால், கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு 4,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்” என்றார்கள்.
விவசாயிகளின் இந்த கோரிக்கை தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, “சர்க்கரை விலையை நிர்ணயிப்பது மத்திய அரசு தான். சர்க்கரை விலையை மத்திய அரசு உயர்த்தி 8 வருடம் ஆகிறது. இன்னமும் கிலோ 31 ரூபாய்க்கு தான் விற்பனை செய்கிறோம். கிலோ 40 ரூபாய் நிர்ணயித்தால், கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் கொடுக்கலாம்.

மேலும், கூட்டுறவு ஆலைகள் மிகவும் பழமையானதாக இருக்கிறது. அதனை நவீன முறையில் நாங்கள் மாற்றவில்லை. அதனால் உற்பத்தி செலவு அதிகமாகிறது. இதுவும் நஷ்டத்திற்கு ஒரு முக்கியமான காரணம்.
அதனால் வரும்காலங்களில் கூட்டுறவு ஆலைகளை நவீன முறையில் மாற்றி, மத்திய அரசிடம் சர்க்கரை கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்துவோம்” என்கிறார்கள். Sugarcane consultation was held
