வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடிக்கிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாமல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையைக் கடக்கும்; இதனால் அதீத கனமழைக்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று (அக்டோபர் 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
