2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், அக்டோபர் 5 அன்று துவங்கியது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றது. இந்த தொடரில், இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வரும் அக்டோபர் 8 அன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் ஆஸ்தான துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து, பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ”சென்னையில் தரையிறங்கியதில் இருந்தே, சுப்மன் கில் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 6) சோதனை நடத்தப்படும். அதன்பிறகே, சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வேண்டுமா? கூடாதா? என்ற முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித், சில வீரர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
சர்வதேச போட்டிகளில் அறிமுகமானதில் இருந்தே சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில், இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 1917 ரன்களை சேர்த்துள்ளார். இவரின் ஒருநாள் போட்டி சராசரி 66.11 ஆக உள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில், கில் இதுவரை 6 சதங்களையும், 9 அரைசதங்களையும் விளாசியுள்ளார். மேலும், ஒருமுறை இரட்டை சதமும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
படைப்பை குணாவுக்கு பாஜகவில் புதிய பதவி!
விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளருக்கு முன் ஜாமீன்!