இந்த மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன்பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர்.
தொழில் முனைவோரின் நிலையும் இதுவே. ஆனால் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அதிகரித்துள்ள ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்களில் தமிழ்நாடு பதிவுச் சட்ட விதி 4 ‘சிறப்பு அவசரநிலை’ அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூ.200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும். இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப் பதிவை உரிய நேரத்தில் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
**-வினிதா**
