உடுமலைப்பேட்டை குடிமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளி மணிகண்டன் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடுமலைப்பேட்டை அருகே மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துகுளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணிபுரிந்த மூர்த்தி குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையை தடுக்க சென்ற போது குடிமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேலை வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடிய மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் இருவரும் கைது செய்யப்பட்டனர். மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் உடுமலைப்பேட்டை அருகே பதுங்கி இருந்த மணிகண்டனை இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். ஆனால் போலீசாரைத் தாக்கிவிட்டு மணிகண்டன் தப்பி ஓட முயன்றார். இதில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் படுகாயமடைந்தார். இதனையடுத்து போலீசார், மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுண்ட்டரில் மணிகண்டன் உயிரிழந்தார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.

படம்: என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மணிகண்டன்
முன்னதாக படுகொலை செய்யப்பட்ட சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
