பிரபல உருகுவே கால்பந்து வீரர் லூயிஸ் சவுரஸ் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் உருகுவே அணிக்காக சவுரஸ் விளையாடி வந்தார். அடுத்த 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் உருகுவே அணி வரும் வெள்ளிக்கிழமை பாரகுவே அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்துடன் சவுரஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
தற்போது, 37 வயதாகும் சவுரஸ் உருகுவே அணிக்காக இதுவரை 142 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 முதல் 2022 வரை உருகுவே அணிக்காக 4 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சவுரஸ் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக 69 கோல்களை அடித்துள்ளார்.
ஓய்வு குறித்து சவுரஸ் கூறுகையில், ”கடினமான காலக்கட்டங்கள் இருந்தது. காயம் காரணமாக ஓய்வு பெறவில்லை. இனி கொஞ்சமாவது ஓய்வெடுக்க வேண்டும். அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்கிறார்.
கால்பந்து உலகில் சவுரஸ் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணி, இத்தாலி அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தின் போது, இத்தாலி வீரர் ஜார்ஜியா கெலினியின் கழுத்தில் சவுரஸ் கடித்து வைத்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து, 9 சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்க சவுரசுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் அவரால் விளையாட முடியவில்லை. கிளப் போட்டிகளை பொறுத்த வரை லிவர்பூல், பார்சிலோனா போன்ற பிரபல அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
தற்போது, அமெரிக்க கால்பந்து தொடரில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச ஆட்டங்களில் ஓய்வு பெற்றாலும், இன்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து சவுரஸ் விளையாடுவார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
’என் அப்பாவுக்கு மெண்டல் பிரச்னை இருக்கு’: அப்பவே பொசுக்குன்னு சொன்ன யுவராஜ்
