ADVERTISEMENT

உரிய நேரத்தில் பஸ்கள் இல்லாததால் நடந்துசெல்லும் மாணவர்கள்!

Published On:

| By admin

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவில் உரிய நேரத்தில் பஸ்கள் இல்லாததால் பள்ளிக்கூடம் முடிந்ததும் இரண்டு கிலோமீட்டர் தூரம் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சியில் இம்மிடிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள கிராம மக்கள் இம்மிடிபாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு செல்ல காலை 8 மணி, மதியம் 2.30 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் பஸ் வசதி உள்ளது. காலை 8 மணிக்கு இம்மிடிபாளையத்திலிருந்து கிணத்துக்கடவு, கோவை ஆகிய பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் செல்ல பஸ் வசதி உள்ளது.

ADVERTISEMENT

ஆனால் மாலை 4.15 மணிக்கு பள்ளிக்கூடம் விடும்போது கிணத்துக்கடவில் இருந்து இம்மிடிபாளையத்துக்கு மாணவர்கள் செல்ல பஸ் வசதி கிடையாது. கிணத்துக்கடவில் இருந்து இம்மிடிபாளையத்துக்கு மாலை 6 மணிக்கு தான் பஸ் வருகிறது. அதுவரை மாணவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் ஒரு சில மாணவர்கள் ஆட்டோ பிடித்து தங்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர். பலர் கிணத்துக்கடவில் இருந்து வேறு டவுன் பஸ் ஏறி லட்சுமி நகர் பிரிவில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள தங்களது ஊரான இம்மிடிபாளையத்துக்கு நடந்து சென்று தங்களது கிராமத்துக்குச் செல்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

ADVERTISEMENT

இதுபற்றி பேசியுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், “எங்களது ஊரிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினசரி கிணத்துக்கடவு மற்றும் கோவை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்கச் சென்று வருகின்றனர். இதில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் கிணத்துக்கடவில் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை உருவாகி வருகிறது.

இதில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாததால் வீடுகளுக்கு நடந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் இரவில் உடல் சோர்வு ஏற்பட்டு படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் உடனே வீட்டுக்குத் திரும்பும் வகையில் பஸ்கள் இயக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share