ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ கேம் போட்டிகளில் கோவையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கப் பதக்கங்களைக் வென்று அசத்தி உள்ளனர்.
சீனாவில் வெய்க்கி எனப்படும் கோ கேம் விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. வியூகங்களை அடிப்படையாக வைத்து எதிராளிகளின் காய்களை சுற்றி வளைத்து கைப்பற்றும் இந்த விளையாட்டில் கோவை மாணவர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் தேசிய அளவிலான கோ கேம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட கோ கேம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியின் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கோவை சுந்தரபுரத்தில் உள்ள வி.எஸ்.செங்கோட்டையன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சஞ்சய், லக்ஷனா, பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் போத்தனூர் ரயில்வே உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த மதுமிதா, ஹர்ஷத், சம்ரிதா ஆகியோர் கலந்ந்து கொண்டனர். மேலும் ஸ்ரீ நாராயண மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் மிதிலேஷ், அமிர்தா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த சிந்தனா, ஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிநவ் மற்றும் மேட்டுப்பாளையம் சிறுமுகை அம்பாள் பள்ளி ஹரி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தங்களது பிரிவுகளில் நடந்த இறுதிப் போட்டிகளில் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பலமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை எதிர்கொண்டனர். பேட்டியின் முடிவில் மொத்தம் 13 தங்கப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
