மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதா? தலைமை ஆசிரியருக்கு சிறை!

Published On:

| By Kalai

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஈரோடு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையை 16 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தபள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெருந்துறை அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவன், தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் மருத்துவரிடம் கூறியுள்ளான்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய், இது குறித்து ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இதை அடுத்து பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, பள்ளியில் படிக்கும் 6 மாணவர்களை தலைமை ஆசிரியை கீதாராணி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது.

தலைமை ஆசிரியை கீதாராணி மீது, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி முதல் தலைமையாசிரியை கீதா ராணி தலைமறைவானார்.

அவரை தேடி வந்த பெருந்துறை போலீசார் இன்று(டிசம்பர் 3) கைது செய்தனர். ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்பு போலீசார் அவரை ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கீதா ராணியை 16 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.  இதனை அடுத்து தலைமை ஆசிரியை கீதா ராணி கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கலை.ரா

“அரசாணை வெளியிடாதது தவறில்லை” – அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்!

விலையேற்றத்தில் தங்கம், வெள்ளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share