பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக மாணவிகள் குற்றம் சாட்டி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 10, 11 வகுப்பைச் சேர்ந்த மாணவி மூன்று மாணவிகள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் பள்ளியில் உள்ள இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் இருவரும் தங்களிடம் பேட் டச்சில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது இது பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. ஏற்கனவே பள்ளியில் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவிகள் யாரும் புகார் அளிக்கவில்லை என்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் போலீசார், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
