மருத்துவ மேற்படிப்பில் சேர்ந்து இரண்டு நாட்களில் விலகிய மாணவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 4) முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அஷ்ரிதா என்ற மாணவி வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார்.
2019 ஆம் ஆண்டு நடந்த மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வின் அடிப்படையில் அதே ஆண்டு மே 1ஆம் தேதி கல்லூரியில் சேர்ந்த மாணவி, சொந்த காரணங்களுக்காக இரண்டு நாட்களில் கல்லூரியிலிருந்து விலகினார்.
தன்னுடைய சான்றிதழ்களையும் திரும்ப வழங்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார்.
மாணவியின் கோரிக்கையை நிராகரித்த கல்லூரி முதல்வர், இப்படி பாதியில் விலகி சென்றால் 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அதனை செலுத்தி விட்டு சான்றிதழ்களை பெற்றுச் செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,
மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மே 31ஆம் தேதி வரை இருக்கையில், மே 3ஆம் தேதியே படிப்பிலிருந்து விலகிய மாணவிக்கு அவருடைய சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி டீன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது கல்லூரி தரப்பில், “ஒரு மாணவருக்கு அரசு பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறது.
ஆனால் அந்த இடம் காலியாவதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதோடு மருத்துவ படிப்பில் மதிப்பு மிக்க ஒரு இடம் வீணாகிறது.
எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அதுபோன்று மாணவி தரப்பிலும் இரண்டு நாட்களிலேயே கல்லூரியை விட்டு நின்றதால் தனக்கு சான்றிதழ்களை வழங்க உத்தரவிடும்படி வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேதி முடிவதற்கு முன்னதாகவே தனக்கு வழங்கப்பட்ட இடத்தை அந்த மாணவி ஒப்படைத்து விட்டதால் அந்த இடத்தை அவருக்கு அடுத்தபடியாக பட்டியலில் உள்ள மாணவருக்கு ஒதுக்கி இருக்க முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.
அதுபோன்று கட்டணம் வசூலிப்பது தொடர்பான விளக்க குறிப்பில் சில தெளிவு இன்மை இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள்,
சான்றிதழ்களை பெற 15 லட்சம் ரூபாய் மாணவி செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்லூரி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்து தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.
அதோடு இரண்டு வாரத்தில் மாணவியின் சான்றிதழ்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரியா
’விடுதலை’ பட விவகாரம்: கொந்தளித்த சோளகர் தொட்டி ஆசிரியர்!
முதல்வர், முன்னாள் முதல்வருக்கு கொரோனா!
