கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் தாய் ராமலட்சுமி மற்றும் ரயில் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்ற இளைஞரால் ரயில் முன் தள்ளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
மகளின் இறப்பை தாங்க முடியாமல் தந்தை மாணிக்கமும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த இரண்டு மரணங்களும் தமிழக மக்களின் நெஞ்சங்களை உலுக்கியது.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த போலீசார் துரைப்பாக்கம் அருகே மடக்கி பிடித்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காதலை கைவிட்டதால் சத்யாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய நினைத்ததாக பல தகவல்களை போலீசிடம் தெரிவித்தார் சதீஷ்.
ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தலைமைக் காவலர் ராமலட்சுமியின் மகளான சத்யா, தியாகராயர் நகரில் உள்ள கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
சத்யாவின் வீட்டருகே வசித்து வந்த சதீஷின் தந்தையும் காவல்துறையில் பணியாற்றியதால் சிறுவயது முதலே இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.
பின்னர் சத்யாவை காதலித்துள்ளார் சதீஷ். ஆரம்பத்தில் சதீஷின் காதலை ஏற்காத சத்யா, ஒருகட்டத்தில் சதீஷிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
ஆனால் 8 ஆவது வரை மட்டுமே படித்துள்ள சதீஷ் வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததால் அவரது நடவடிக்கை பிடிக்காமல் விலகத் தொடங்கியுள்ளார். சத்யாவின் குடும்பத்தினருக்கும் இந்த விஷயம் தெரிந்து அவரைக் கண்டித்துள்ளனர்.
இதனால் சதீஷ் உடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளார் சத்யா. அவரிடம் பலமுறை பேச முயன்றும் பலனில்லை. இதனால் சத்யாவின் கல்லூரிக்கே சென்று அடித்தும் உள்ளார்.

இதுதொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சத்யாவுக்கு திருமண ஏற்பாடுகளும் நடந்துள்ளன.
ஆனால் சத்யாவின் நினைவாகவே சுற்றித்திரிந்த சதீஷ் எப்படியாவது தனது காதலை ஏற்க வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் 13 ஆம் தேதி சத்யா, கல்லூரிக்கு செல்ல தோழிகளுடன் ரயில்நிலையம் வந்துள்ளார்.
அப்போது அவரிடம் சென்று பேசிய சதீஷை சத்யா உதாசீனப்படுத்தியதாலும், பெற்றோர் கை காட்டுபவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதாலும் கோபம் தலைக்கேறி இருக்கிறது.
அந்த நேரம் பார்த்து ரயில் வந்ததால், தனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி சத்யாவை எட்டி உதைத்து தண்டவாளத்தில் தள்ளியதாக போலீசிடம் தெரிவித்திருக்கிறார் சதீஷ்.

ஆனால் சத்யா யாரையும் காதலிக்கவில்லை, இது ஒருதலைக்காதல் தான் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்யா கொலை வழக்கு ரயில்வே போலீசிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நேற்று முன் தினம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
சத்யா வசித்து வந்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு மற்றும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இன்று(அக்டோபர் 17) சத்யாவின் தாய் ராமலட்சுமி மற்றும் சம்பவத்தன்று ரயிலை இயக்கிய ஓட்டுனர் கோபால் என்பவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலை.ரா
சட்டமன்றத் தொடரையே புறக்கணிக்கலாமா? எடப்பாடி அவசர ஆலோசனை!
சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? ஓ.பன்னீர் பேட்டி!