தர்மபுரி மாவட்டம் நவலை கிராமத்தில் கள்ள சந்தையில் அதிக அளவில் மதுபானம் விற்பனை செய்வதாக, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று (அக்டோபர் 10) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகேயுள்ள நவலை கிராமத்தில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மது விற்பனை அந்த பகுதியில் அதிகளவில் இருப்பதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை கம்பை நல்லூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பள்ளி மாணவ மாணவிகள் கிராம மக்களுடன் சேர்ந்து இன்று காலை மொரப்பூர் கம்பை நல்லூர் செல்லும் சாலையில் நவலை கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவ மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் மாணவர்கள் இதுகுறித்து கூறுகையில், “வெளியூரிலிருந்து வருபவர்கள் மதுவை குடித்துவிட்டு போதை தலைக்கேறி பள்ளி அருகில் விழுந்து கிடக்கிறார்கள்.
கள்ள சந்தையில் விற்பனை செய்பவர்களைத் தடுக்க கூடிய காவல்துறை அதிகாரிகள், சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்குகிறார்கள்.
இதனால் எங்கள் பெற்றோர்கள் மது அருந்திவிட்டு வீட்டில் வந்து தகராறில் ஈடுபடுகின்றனர்.
நாங்களும் பலமுறை காவல்துறையிடம் கூறியும் பலன் இல்லை, அதனால்தான் போராட்டத்தில் இறங்கினோம்” என்கிறார்கள்.
கள்ள சந்தை மது விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும் என்று வருவாய் துறை மற்றும் காவல்துறை சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டவுடன்,
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வம்
