கர்நாடகாவில் இன்று (செப்டம்பர் 26) முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதால் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்காக தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆணையைப் பின்பற்றி தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும்.
ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை எதிர்த்து விவசாய அமைப்புகளும், கன்னட ஆதரவு அமைப்புகளும் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், 175க்கு மேற்பட்ட அமைப்புகள் கன்னட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லக்கூடிய லாரிகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டும் தான் செல்லும் என்று தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெங்களூருவில் மெட்ரோ மற்றும் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் நடந்த தரமான சம்பவங்கள்: டைம் டு டைம் ரிப்போர்ட்!
90,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா: என்ன காரணம்?
தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: கே.என்.நேரு