சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைகள் மற்றும் பொதுத் தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் பாதுகாப்பு வளையங்கள் அமைக்க பத்து நாட்கள் கெடு விதித்துள்ளது டிஜிபி அலுவலகம்.

சமீபநாட்களாக தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலையை அவமதித்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெரியாருக்கு காவி சாயம், எம்.ஜி.ஆருக்கு காவித் துண்டு என அணிவிக்கப்பட்டது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இதுபோன்ற அருவருப்பான சம்பவங்கள் நடக்காமல் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை நிலைநாட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார். அப்போது, சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறதா என்று கேட்டுள்ளார். கொரோனா காலத்தில் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடுவது சிரமமாக இருக்கும். அதனால் தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கு அரசு செலவில் கூண்டு அமைத்துவிடலாம் என்று ஆலோசனைகளை கூறியுள்ளார்கள் காவல் துறை அதிகாரிகள். இதை முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக உளவுத் துறை அதிகாரிகள் மூலமாகத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் வைத்துள்ள சிலைகள் பட்டியல்களைச் சேகரித்து டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மூன்று நாட்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட, மாநகராட்சி காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர சுற்றறிக்கை வந்துள்ளது. அதில், ‘தங்கள் மாவட்டம், மாநகரில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் இரும்புக் கம்பியால் பத்து நாட்களுக்குள் கூண்டுகள் அமைக்க வேண்டு. பத்து நாட்களுக்குள் இதை முடிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து தற்போது ஒவ்வொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிலைகளுக்கு இரும்பு கம்பியால் சிறையமைக்க அளவு எடுத்து வருகிறார்கள்.

**-வணங்காமுடி**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share