வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை: முதல்வர் அறிவிப்பு!

Published On:

| By Kavi

வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரியில் சிலை அமைக்கப்பட உள்ளது.

முன்னாள் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி. பி. சிங்கிற்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அறிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஜூன் 25) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

“உத்தரப் பிரதேச மாநில முதல்வர், மத்திய வர்த்தக அமைச்சர், வெளியுறவுத் துறைஅமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர் வி. பி. சிங். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார்.

அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை.

இதனை வழங்குவதற்காக பி. பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும்,

சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்தியவர் சமூக நீதிக் காவலர் வி. பி. சிங்.

அவர் தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தார்; தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக் கொண்டார்.

ஒரு மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது “அவமானம்”. இந்த அவமானத்தை துடைக்கும் மருந்துதான் பெரியாரின் “சுயமரியாதை” என்று சொன்னவர் வி. பி. சிங்.

கலைஞரை தனது சொந்த சகோதரர் போல் மதித்தவர். தனது ஆட்சியைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக தன்னோடு இருந்த மாபெரும் தலைவர் கருணாநிதி என்று பாராட்டியவர் வி. பி. சிங்.

அத்தகைய சமூக நீதிக் காவலருக்கு அவருடைய பிறந்தநாளான இன்று, ஏற்கனவே 20.4.2023 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கு இணங்க,

சென்னை, மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று,

அரசு அதனை பரிசீலித்து “சமூக நீதிக் காவலர்” வி. பி. சிங்குக்கு சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

பிரியா

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு?

பொல்லாப் பழங்கருவியாம் இயற்கை!

Statue of VP Singh in Chennai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share