மதுரையில் கள்ளழகர் இன்று காலையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழா- வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல் நிகழ்ச்சி என்பது தென் தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான ஆன்மீகத் திருவிழா. இந்த நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதற்காக வைகை அணையில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் வைகை ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியை உயரமான மாடிகள், மரங்களின் மீது ஏறி நின்ற்படி பக்தர்கள் தரிசனத்தனர். பக்தர்களின் இந்த தரிசனத்துக்கு மதுரை தந்தை பெரியார் சிலையும் உதவியதுதான் சுவராசியம்.
கடவுள் இல்லை.. கடவுள் இல்லவே இல்லை என்று வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்தவர் தந்தை பெரியார். கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு வாசகங்களுடன் தந்தை பெரியாருக்கு மதுரையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளழகரை எளிதாக தரிசனம் செய்ய நினைத்த பக்தர்கள், கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் முழு உருவச் சிலை அமைந்துள்ள இடத்தில் மாலை அணிவிக்கும் பகுதியில் ஏறி நின்று வழிபட்டனர். “கடவுள் கள்ளழகரைக் காணவுமே கடவுள் மறுப்பாளர் தந்தை பெரியார்தான் உதவினார்”!.
