புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் கடந்த மூன்று மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தனிமாநில அந்தஸ்து கோரி நிறைவேற்றிய தீர்மானத்திற்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி கோரும் விவகாரத்தில் சில சமூக அமைப்புகள் மாண்புமிகு துணைநிலை ஆளுநரை குற்றம்சாட்டி தீர்மானம் இயற்றியிருக்கும் செய்தி இன்று சில நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வரப்பட்ட மாநில தகுதிக்கான தீர்மானத்தை துணைநிலை ஆளுநர் 3 மாத காலம் கிடப்பில் போட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்பு கடந்த ஜூலை 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்தது.
விடுமுறை நாளான சனிக்கிழமையில் கோப்பு பெறப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அன்றே துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்