தமது மூத்த சகோதரர்களில் ஒருவரான மு.க. முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததை ஏற்க முடியாமல் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் குமுறுகின்றனர். Seeman Stalin
திமுகவின் ‘முரசொலி’ வாசகர் வட்ட சென்னை தெற்கு மாவட்ட அமைப்பாளர் ‘தடா’ ஓ.சுந்தரம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: விரிவானம் போன்ற நெஞ்சம் கொண்ட தலைவரே! கழிசடைக்கு “நிகராசனமா”?முத்தமிழ் அறிஞர், உங்கள் உயிரில் கலந்துள்ள தலைவர் கலைஞரின் உடன் பிறப்புகள் உள்ளம் கொதிக்கிறது தலைவா!

விரிவானம் போன்ற உங்கள் நெஞ்சம் பகைவனுக்கும் அருளும்! ஆற்றோட்டத்தில் அடித்து வரப்படும் மணக்கும் சந்தன மரங்களை அணைத்துச் செல்லும் ஆறு, அதிலே மிதந்து வரும் அழுக்குகளைப் பொருட்படுத்துவதில்லை!
களங்கமற்ற விரிவானத்தில் கழிவுகளை வீசிச் செல்லும் சில பிணந்தின்னிப் பறவைகள் எண்ணி இறுமாப்பு கொள்ளும் நீலவானத்தை களங்கப்படுத்தி விட்டோம் என!

வசவுகள், அவதூறுகள், திட்டமிட்ட சதிச் செயல்கள், இழிவுகள் அனைத்தையும் உரம் ஆக்கி கொண்டு, விழுப்புண்களை ஆரமாக அணிந்து கொண்டு, இந்திய அரசியல் அரங்கில் திராவிடரியக்கத்தின் உரிமைக் குரலாக, தேசிய இனங்களின் முகமும், முகவரியும் அழியாமல் காத்து, தமிழினத்திற்கு தொண்டாற்றிக் கிடப்பதே என் கடமை எனச் சூளுரைத்து, வசவாளர்களும் வெட்கப்படும் வகையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ‘அதிசயமாக’ நீங்கள்! எமது தலைவர் என்பதில் தனிப் பெருமை எங்களுக்கு!
ஒளிரும் உங்கள் புகழ் வெளிச்சமே தொண்டர்களுக்கு வழி காட்டும் விளக்கு! கழகத்திற்கு இதுவே கலங்கரை விளக்கம்! இத்தனை பெருமைகளையும் ஒரு விதையாக்கி,அது ‘ஸ்டாலின்’ எனும் பெரும் மரமாய் வளர்ந்தோங்க செய்திட்ட தானைத் தலைவர், தமிழ்த் தாய் பெற்றெடுத்த தலைமகன்,’உடன் பிறப்பே!’எனும் ஒரு சொல்லில் பல கோடித் தொண்டர்களை பாசக் கயிறால் கட்டியாண்ட தலைவனை, ஒரு பாலியல் குற்றவாளி,’ சண்டாளன் கருணாநிதி’ எனச் சாக்கடை வாயால் ‘சரிகம’ பாடி விட்டுத் தமிழ்நாட்டுத் தெருக்களிலே உடல் உறுப்புகளுக்குச் சேதமின்றி நடமாடுகின்றானே’ எனக் கொதித்துப் போய், உள்ளம் குமுறி அடங்கிக் கிடக்கின்றோம் உங்கள் கட்டளையால்; கலவரம் செய்யாமல் தலைவரே!
எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல, இன்றைய “முரசொலியில்” இந்தக் கழிசடைக் கும்பல் உங்களுக்கு ‘சரிநிகர் ஆசனம்’ பெற்று அமர்ந்திருக்கும் காட்சி கண்டு கோடிக்கணக்கான எளிய தொண்டர்களின் உள்ளம் வேதனையால் துடிக்கிறது தலைவரே! ஏற்கவே முடியாமல் நெஞ்சம் வலிக்கிறது தலைவரே! எம் உணர்வுகளை உங்கள் பார்வைக்கு வணங்கி வைக்கின்றோம் தலைவரே! இவ்வாறு திமுக நிர்வாகி ஓ.சுந்தரம் பதிவிட்டுள்ளார்.
