உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து: ஸ்டாலின் வரவேற்பு!

Published On:

| By Kalai

தீர்ப்பை மாநில மொழிகளில் வெளியிடவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கு உழைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார்.

அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை, இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் என்று பிரதமர் மோடி அவரது காணொலியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனையை தான் முழு மனதுடன் வரவேற்பதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அனைத்து இந்திய மொழிகளிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

இது உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கையுடன், நமது நாட்டின் சாமானிய மக்களுக்கு நீதியை நெருங்கச் செய்யும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share