சீர்காழியிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று வைகோ அறிவித்ததற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
ஆனால் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று வைகோ கூறி வந்த நிலையில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் மூன்று இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும் சீர்காழி தொகுதியில் மட்டும் தனி சின்னத்திலும் போட்டி என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக பேசிய வைகோ, எங்களின் பலத்தை நிரூபிக்கவே ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் திடீர் ட்விஸ்டாக இன்று (ஏப்ரல் 1) சீர்காழி தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று அறிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இதனை வரவேற்றுள்ள முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “ஆருயிர் அண்ணன் வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
