இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 10) பேரணி நடந்தது. Stalin rally Governor Ravi
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் நடந்தன. இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று போரை முடிவுக்கு கொண்டு வந்தன.
இதற்கிடையே பாகிஸ்தானை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவப்படைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததோடு, தமிழ்நாடு சார்பில் பேரணி நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி இன்று மெரினா காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முப்படை வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தேசிய கொடியை கையில் ஏந்தியபடி அவர்கள் பேரணி சென்றனர். ‘இந்திய ராணுவத்தின் செயலுக்கு துணை நிற்போம்’ என வாசகம் பொறித்த தொப்பி மற்றும் ‘இந்திய ராணுவம் வெல்லும்’ என்ற பேட்ஜ் அணிந்தும் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவு தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள். நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ராணுவத்துக்கு ஆதரவளிப்பதில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். முன்னாள் வீரர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேரணி செல்கிறார். இது வரவேற்கத்தக்கது” என்று கூறினார். Stalin rally Governor Ravi
